`தனது தந்தையின் செல்போனை எடுத்துதான் இந்தக் காரியத்தை அவன் செய்திருக்கிறான். அவனது அப்பா ரியாஸ் அகமது அவனைக் கண்டித்திருக்கலாம் அல்லது செல்போனை எடுத்து நீண்ட நேரம் வைத்திருக்கும் போதாவது என்னடா செய்றே எனக் கேட்டு கண்காணித்திருக்கலாம்’

பாபநாசம் அருகே 16 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் செல்போனைப் பயன்படுத்திக் குழந்தைகளின் ஆபாசப் படங்களை முகநூலில் பதிவிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அந்தச் சிறுவனைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைது

கைது

மாதிரிப் படம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடை பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது (45). இவரது மகனான 16 வயதுச் சிறுவன் குழந்தைகளின் ஆபாசப் படத்தை முகநூலில் பதிவு செய்து வந்துள்ளார். இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் யார் யாரெல்லாம் முகநூலில் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர் என்ற விவரங்களைச் சேகரித்தனர். அதில் பண்டாரவடையைச் சேர்ந்த ஒருவரின் செல்போனிலிருந்து குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பான தகவல்களை பாபநாசம் காவல்துறைக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இது குறித்து விசாரணை செய்து வந்ததில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை தந்தையின் செல்போனில் அவரது மகனே பதிவேற்றம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது இதை அந்தச் சிறுவனே ஒப்புக்கொண்டுள்ளான். இதையடுத்து அந்தச் சிறுவனையும் அவனின் செயலைக் கண்டிக்காத அவனது தந்தையான ரியாஸ் அகமதுவையும் கைது செய்தனர்.

தஞ்சை பாபநாசம்

தஞ்சை பாபநாசம்

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஒரு மாதத்திற்கு மேலாகக் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்துள்ளன. இதுதொடர்பாக நாங்க விசாரணை மேற்கொண்டோம். அதில், தனது தந்தையின் செல்போனிலிருந்து அவரது மகன் ஆபாசமாக இருப்பது மாதிரியான போட்டோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளான்.

எந்த செல் நம்பர் மற்றும் எந்த செல்போன், எந்த ஃபேஸ்புக் ஐடியின் மூலம் பதிவேற்றம் செய்தான் என்பதை ஆதாரபூர்வாக கண்டுபிடித்து விசாரித்தபோது, `தெரியாம செய்துவிட்டேன் சார்’ என எந்த சலனமும் இல்லாமல் இதனை ஒப்புக் கொண்டான். இதில் கொடுமை என்னவென்றால் தனது தந்தையின் செல்போனை எடுத்துதான் இந்தக் காரியத்தை அவன் செய்திருக்கிறான். அவனது அப்பா ரியாஸ் அகமது அவனைக் கண்டித்திருக்கலாம் அல்லது செல்போனை எடுத்து நீண்ட நேரம் வைத்திருக்கும் போதாவது என்னடா செய்றே எனக் கேட்டு கண்காணித்திருக்கலாம். ஆனால், அதனை அவர் செய்யத் தவறிவிட்டார். இது அந்தச் சிறுவனக்குச் சாதகமாகிப் போனது.

இதையடுத்து அந்தச் சிறுவன் மற்றும் அவனது தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அந்தச் சிறுவன் அடைக்கப்பட்டான். அத்துடன், `விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என எச்சரிக்கையுடன் அவனது தந்தை விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.