தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு சீமான் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அந்தபின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தி வந்தால் நிலவு வருவதை போல ஹிந்தி வந்தால் பிளவு வரும் என்று தெரிவித்தார். அத்துடன், ஹிந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலம், ஹிந்தியைப் போல் தமிழையும் நாடெங்கும் படிக்கச் சொல்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்பின்னர் அவரிடம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சீமான், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தானும் அதில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல்களத்தில் தற்போது இதுகுறித்த பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. அத்துடன், பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பாக தங்கள் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.