தாலி கட்ட சென்ற நேரத்தில் மணப்பெண் தாலியை பிடுங்கி கோவில் உண்டியலில் போட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பட்டதாரி இளைஞர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண்ணுக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்காக ஒரு மாதம் விடுமுறை எடுத்து வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த அவர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். கடந்த திங்கள் கிழமை கோவிலில் திருமணம் நடைபெற இருந்ததுடன், உறவினர்களும் வந்துள்ளனர்.
முகூர்த்த நேரத்தில் மணமகன் அருகில் அமர்ந்திருந்த மணமகள் தாலி கட்டும் நேரத்தில், தாலியை பிடுங்கி கையில் வைத்ததுடன், கோவில் உண்டியலில் போடுவதற்கு முயற்சித்துள்ளார்.
அப்பொழுது உறவினர்கள் சமாதானப்படுத்தியும் மணப்பெண் கேட்கவில்லையாம். தனது பெற்றோர்களின் வற்புறுத்தலால் தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறியதுடன், தற்போது திருமணம் வேண்டாம் என்று ஒரே முடிவாக இருந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உறவினர்களிடம் பேசியும் குறித்த மணப்பெண் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தற்போது மணமகன் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.