தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காட்டுப் பகுதியில் உடல் வீசப்பட்டது குறித்து 2 இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளம் அடுத்துள்ள கல்விளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து ஏழு வயது மகள் மற்றும் ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அப்பெண்ணின் மகள், அதே தெருவில் உள்ள முத்தீஸ்வரன் என்ற இளைஞரின் வீட்டிற்கு டிவி பார்க்கச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாயார் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது அங்கில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் பல இடங்களில் தேடிய நிலையில், அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்துச் சென்ற சாத்தான்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி டிவி பார்க்கச் சென்ற வீட்டைச் சேர்ந்த முத்தீஸ்வரன் என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பின்னர் நண்பன் நிதீஷ் என்பவனை உதவிக்கு அழைத்து சிறுமியின் உடலை தண்ணீர் டிரம்முக்குள் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டுச் சென்று காட்டுப் பகுதியில் வீசியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது. சிறுமி எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது போன்ற தகவல்கள் குறித்து இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.