குஜாராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுக்குகொன்று சண்டையிட்ட காட்சி தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 


காட்டிற்கே ராஜாவாக கருதப்படும் சிங்கங்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதையும் அதனுடன் சண்டையிடும் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் சிங்கத்துடன் சிங்கமே சண்டையிடும் காட்சியை பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவம் குஜராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களின் ஒரே புகழிடமாக விளங்கும் கிர் தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த தேசிய பூங்காவை முழுவதும் ஆட்சி செய்து வரும் ஆசிய சிங்கங்களை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு அங்கு சென்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஜூபின் ஆஷாரா ஒரு அரிய வகை காட்சியை படமாக்கியுள்ளார்.  22 வினாடிகள் உள்ள இந்த வீடியோவில் சாலையின் குறுக்கே ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் காட்சிகள் காட்டுகின்றன. அதில் அளவில் பெரியதாகவும் அரசனாகவும் விளங்கும் ஆண் சிங்கம், பெண் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குவதும் காட்சி படுத்தப்பட்டுள்ளன. 

இந்த அரிய காட்சியை அந்த புகைப்பட கலைஞர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர்..இந்த சண்டையை பார்த்து சிலர் வியப்பாக கமெண்டுகளை பதிவிட்டிருந்தாலும், பலர் இது தினம்தோறும் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே  நடக்கும் சண்டையை ஒத்துள்ளதாக கேலியாக கமெண்ட் செய்துள்ளனர். 

 

ஒரு காலத்தில் வேட்டையாடுதல் மற்றும் நோய் காரணமாக அழிவின் விளிம்பில் இருந்த ஆசிய சிங்கங்கள் இப்போது மத்திய அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிர் தேசிய பூங்காவில் 674 சிங்கங்கள் உள்ளன