முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்திக்காக தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் திட்டத்தை வகுக்கப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை வகுப்பதற்காக இதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பிரதி நிதிகளைக் கொண்ட செயற்பாட்டு குழு ஒன்றை அமைப்பதற்கு நேற்று (10) நடைபெற்ற அமைச்சவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
02. முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்தலும் பேண்தகு வகையில் பயன்படுத்தலும்.
நீர்கொழும்பு களப்பு மற்றும் சதுப்பு நில வலயம் 6,232 ஹெக்டயர் பரப்பளவில் முத்துராஜவெல சுற்றாடல் தொகுதி அமைந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் சுற்றாடலை பேண்தகு வகையில் பயன்படுத்தி நகரக் குடியிருப்பாளர்களின் சமூகப் பொருளாதார நலனோம்புகைகளை மேற்கொண்டு செல்வதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இச்சதுப்பு வலயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1991 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவும் இணைந்து தயாரித்த பிரதான திட்டத்தின் (Master Plan) மூலம் பாதுகாப்பு வலயம், தாங்கு மண்டல வலயம், கலப்பு நகர வலயம் என மூன்று முக்கிய காணிப் பயன்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் குறித்த வலயத்தின் 1,285.45 ஹெக்ரயார் நிலப்பரப்பு வன சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தால் முத்துராஜவெல சரணாலயம் எனவும், மேலும் 162.1 ஹெக்ரயார் நிலப்பரப்பு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரதேசமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய காணி நிரப்பல், சதுப்பு நிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு உட்கட்டமைப்புக் கட்டுமானங்கள், பல்வேறு செயற்பாடுகளுக்காக காணிகளைக் கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளைப் பிடித்தல், குப்பைகள் கழிவுகளை அகற்றல் போன்ற காரணங்களால் சுற்றாடல் தொகுதி அழிவடையும் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது.
அதனால், குறித்த சதுப்பு நில வலயத்தின் நிலைபேற்றுக்கும் அதனை பேண்தகு விதத்தில் பயன்படுத்துவதற்கும் கீழ்வரும் நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு விதத்திலான பயன்பாட்டுக்காக சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் பிரதான திட்டத்தை (Master Plan) துரிதமாகத் தயாரித்தல்.
• அதற்காக ஏற்புடைய பங்குதார நிறுவனங்களின் தலைவர்கள்/பிரதிநிதிகள் அடங்கிய நடவடிக்கை குழு மற்றும் செயற்பாட்டுக் குழு ஒன்றை நியமித்தல்.
• நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய உகந்த பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்துவதற்காக அரச/தனியார் காணிகளை நகர அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய கையகப்படுத்தல்.
• தாழ் நிலப் பிரதேசமாக குறித்த சுற்றாடல் தொகுதியை பேண்தகு விதத்திலான பயன்பாட்டுக்காக குறித்த ஏற்புடைய நடவடிக்கைகளுக்கான பொறுப்பை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைத்தல்.
• பிரதான திட்டத்தின் (Master Plan) கீழ் அடையாளங் காணப்படும் தேசிய பாதுகாப்பு வனமாக்கப்பட வேண்டிய பிரதேசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சட்டத்தின் கீழ் தேசிய வனமாக பிரகடனப்படுத்தல்.
• நடவடிக்கைக் குழு தயாரிக்கின்ற பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்தி முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை றம்சா (RAMSAR) ஈரநில வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்
