அசாமின் நகாவன் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்து வந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்தனர்.  இந்த சம்பவம் நடந்தபொழுது, சிறுமி கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.  சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் அசாமில் மற்றொரு கொடூர நிகழ்வு நடந்துள்ளது.

அசாமின் லகிம்பூர் மாவட்டத்தில் சால்துவா நகரில் 9 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.  சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர்.  கோகமுக் நகரில், சங்கர்தேவ் ஷிசு நிகேதன் பள்ளியில் படித்து வந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது போன்று காண்பிப்பதற்காக சிறுமியை தூக்கிலிட்டு உள்ளனர்.

பெற்றோர் திரும்பி வந்து பார்க்கும்பொழுது, வீட்டின் அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி இருந்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போகிநடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த சம்பவத்தில் மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் விசாரணைக்காகவே அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்றும், இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.  அசாமில் 2 வாரங்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.