கொரோனா இரண்டாவது அலையை ஒடுக்க முப்படைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அப்படைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் மோடியும், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கொரோனா தடுப்பு சிகிச்சை பணியில் ஈடுபடுவதற்காக, ஆயுதப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற மருத்துவ பணியாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடியிடம் முப்படை தலைமை தளபதி தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. அதை ஒடுக்க முப்படைகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அப்படைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் மோடியும், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது, முப்படைகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் பிரதமரிடம் பிபின் ராவத் தெரிவித்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகளும், பணியாளர்களும் மருத்துவ அவசரநிலை உதவி மையம் (ஹெல்ப்லைன்) மூலமாக ஆலோசனை கூற வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பல்வேறு இடங்களில் முப்படை வசம் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிபின் ராவத் கூறினார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பிராந்திய தலைமையகங்கள், கோட்ட தலைமையகங்கள் மற்றும் படைப்பிரிவு தலைமையகங்களில் பணியாற்றி வரும் அனைத்து மருத்துவ அதிகாரிகளும், ஆஸ்பத்திரிகளில் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு உதவியாக பெருமளவில் நர்சுகளும் நியமிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரிடம் முப்படை தலைமை தளபதி தெரிவித்தார்.
ராணுவ மருத்துவ கட்டமைப்புகளை பெருமளவில் உருவாக்கி வருவதாகவும், அவை பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் பிபின் ராவத் கூறினார்.
ஆக்சிஜன் சிலிண்டர்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் கொண்டுவர இந்திய விமானப்படை எடுத்து வரும் நடவடிக்கைகளை பிபின் ராவத்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.