மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களினால் ஏற்படும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கைக்கு அமைய இதுவரை 8 ஆயிரத்து 957 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கடந்த 48  மணி நேர காலப்பகுதிக்குள் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

295  மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்  264 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை தொடர்பில் ஆயிரத்து 298 பேரும் சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் செலுத்திய 875 பேரும் வீதி விதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில்  2 ஆயிரத்து 2 பேரும்  ஏனைய குற்றங்கள் தொடர்பில்  4 ஆயிரத்து 105 பேர் இவ்வாறு   சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களினால் ஏற்படும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக வீதி விபத்துகளினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் என்பதன் காரணமாக இவ்வாறான விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.