கருணா இராணுவத்தை கொன்றதும் உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால் நாம் அரசியல் செய்வது சர்வதேச சதியென கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச சதிகள் நாட்டிற்கு எதிராக இடம்பெறுவதாக கூறி நாட்டினை சர்வதேசத்திற்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்ஷக்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவம் கட்சியின் உறுப்பினர்களுடன் முரண்பட்டமையினாலும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த தலைமைத்துவமும் செயற்பட்ட காரணத்தினாலுமே ஐக்கிய மக்கள் சக்தி என்ற தனிக் கட்சியை உருவாக்க நேர்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் அவருடன் இருந்த பிரதான தலைமைகளுமே காரணம் என்றும்
அவர்கள் இந்த நாட்டில் இனிமேல் அங்கீகாரம் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்ட சரத் பொன்சேகா ராஜபக்ஷக்களை வீழ்த்தக்கூடிய ஒரே அணி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் கூறினார்