திருவனந்தபுரம் அருகே பேஸ்புக்கில் பழகிய வாலிபர்களை மயக்கி நகை-பணத்தை பறித்த கேரள பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா செங்கன்னூர் மாவிலதேக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது31). இவர் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறார். அதில் அவருக்கு பலர் நண்பர்களாக கிடைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் நண்பர்களாக உள்ள வாலிபர்களின் செல்போன் எண்ணை பெற்று, அவர்களை லாட்ஜூக்கு வரவழைப்பாராம். அவ்வாறு வரும் வாலிபருக்கு லாட்ஜ் அறையில் வைத்து ராகி மற்றும் அவரது கணவர் ரெதீஸ்(36) ஆகிய இருவரும் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து, அவர் அணிந்துள்ள நகைகள் மற்றும் வைத்திருக்கும் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுவிடுவர்.

இவ்வாறு பலரும் ராகியின் வலையில் சிக்கி நகை மற்றும் பணத்தை இழந்துள்ளனர். அவமானம் கருதி ராகி பற்றி யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 18-ந்தேதி செங்கன்னூரை சேர்ந்த ஒருவரை ராஜி லாட்ஜூக்கு அழைத்துள்ளார். அதன் பேரில் அந்த வாலிபரும் சென்றிருக்கிறார்.

பின்பு அந்த வாலிபருக்கு மயக்கமருந்து கொடுத்து மயக்கமடைய செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்க செயின், பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த வாலிபர் செங்கன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பேஸ்புக் மூலம் ராஜி பழகினார் என்று ஏமாந்த வாலிபர் கூறியதன் அடிப்படையில், அவரது கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் முகவரியை சேகரித்தனர்.

அந்த முகவரியில் சென்று பார்த்தபோது, அது ஆள் இல்லாத பாழடைந்த ஒரு வீடு என்பது தெரியவந்தது. பேஸ்புக்கில் நண்பர்களாக கிடைத்தவர்களை லாட் ஜூக்கு வரவழைத்து நகை மற்றும் பணத்தை திருடியதும், அவர்களிடம் சிக்காமல் இருக்கபேஸ்புக்கில் போலி முகவரி கொடுத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜி மற்றும் அவரது கணவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் அங்கு சென்று, கணவன்-மனைவி இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

இதேபோல் எத்தனை பேரிடம் பணம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.