கள்ளக்குறிச்சியை சே்ாந்தவர் சம்சுதீன்நிஷா(வயது 29). இவரும், சென்னையை சேர்ந்த காஜாமுகைதீன் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஷப்ரின்(13) என்ற மகளும், சபீர்(8) என்ற மகனும் இருந்தனர். இதில் ஷப்ரின் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இருவரும் சென்னையில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக காஜாமுகைதீன் இறந்துவிட்டார். இதையடுத்து சம்சுதீன்நிஷா கள்ளக்குறிச்சி கேசவலு நகரை சேர்ந்த ஷெரீப் (34) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ஷெரீப் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை என்பதால் ஷப்ரின், சபீர் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சியில் தனது தாயுடன் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சம்சுதீன்நிஷா, தனது கணவர் ஷெரீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு மகன், மகளுடன் தூக்கில் தொங்குவதாகவும், 5 நிமிடத்தில் இறந்து விடுவோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷெரீப் அவரது தாய் இம்ரானாபேகம், தந்தை உதுமான் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றிருந்த அவர்கள் உடனடியாக வீட்டுக்கு ஓடோடி வந்து பார்த்தனர். அப்போது உள்பக்கமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கே வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் ஒரே சேலையில் சம்சுதீன்நிஷா தனது குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடன் அவர்களை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஷப்ரின், சபீர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சம்சுதீன்நிஷாவை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து சம்சுதீன்நிஷாவின் அண்ணன் அப்சர்அலி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சுதீன்நிஷாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.