பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கன்வர் பீர்சிங். உயர்ஜாதியை சேர்ந்த இவர் தலித் சமூக பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
இவர் இந்தியாவுக்கு வரும் போது இருவரும் பழகி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அங்குள்ள சீக்கியர் கோவிலுக்கு சென்று சத்தியம் செய்து கொடுத்தார். இதன் பின்னர் அவருடன் பாலியல் ரீதியாக நெருங்கி பழகினார்.
ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்ளாமல் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். தலித் பெண் என்பதால் தனது குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று பெண்ணிடம் கூறினார்.
இதையடுத்து அந்த பெண் அமிர்தசரஸ் போலீசில் புகார் அளித்தார். கன்வர்பீர்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவானார். போலீசார் கைது செய்யாமல் இருக்க அரியானா ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கன்வர்பீர்சிங் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், சம்பந்தப்பட்ட பெண்ணை கன்வர்பீர்சிங் திருமணம் செய்வதற்கு தயாராக இருக்கிறார். தற்போது அந்த பெண் ஆஸ்திரேலியாவில் உள்ளார். அவர் வந்ததும் திருமணம் செய்ய தயார். 6 மாதத்துக்குள் அவரை திருமணம் செய்து கொள்வார். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு அவருக்கு முன் ஜாமீன் வழங்க சம்மதித்தனர். திருமணம் செய்ய மறுத்தால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.