இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தியேட்டர்களில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,  தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளையும் நாளை முதல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதுபற்றி மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

திரையரங்குகளில் நாளை முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம். தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். 

ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது அரசுக்கு பல புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கன கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.