வடக்கு மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார அமைச்சிலிருந்து 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசிகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தனியார் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று, மேல் மாகாணத்திலுள்ள பிரதான 9 வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதாவது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும் வட.கொழும்பு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கும் கொழும்பு தொற்று போதனா வைத்தியசாலையில் 781 பேருக்கும் இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை பனாகொடை இராணுவ வைத்தியசாலையில் 400 பேருக்கும் ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் 382 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 190பேருக்கும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 108 பேருக்கும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் 80 பேருக்கும் வெலிசறை கடற்படை முகாமில் 56 பேருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன்.
அந்தவகையில் நேற்று மாத்திரம் மொத்தமாக 5,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை முதல் பொலிஸாருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.