ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). பழ வியாபாரி. இவரது மனைவி மீனா. தம்பதிக்கு தர்ஷன் (2) என்ற மகனும், 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இன்று காலை 6 மணியளவில் மீனா தனது மகன் தர்ஷனுடன் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது விண்ணமங்கலம் மலை அடிவாரத்தில் இயங்கிவரும் கல்குவாரியில் ஜல்லிகற்கள் ஏற்றி வரச் சென்ற டிராக்டர் தர்ஷன் மீது மோதி தலையில் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை தர்ஷன் பரிதாபமாக இறந்தான். மீனா கண்ணெதிரிலேயே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தர்ஷன் இறந்ததைக் கண்ட அவர் கதறி துடித்தார்.
அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள் குழந்தை மீது மோதிய டிராக்டர் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற டிராக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
கல்குவாரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரி மற்றும் டிராக்டர்களில் ஜல்லி கற்களை ஏற்றி செல்கின்றனர். ஜல்லி ஏற்றி வரும் வாகனங்கள் இந்தப் பகுதியில் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே இப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.