கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை அம்பகமுவ மாபொத்தன பகுதியில் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவனை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (28) மாலை வேளையில் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 27ம் திகதி புதன்கிழமை இரவு மனைவியை கத்தியால் வெட்டி குறித்த நபர் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அவரது சகோதரனின் வீட்டுக்குச் சென்று நடந்த விடயங்களை தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின் குறித்த சகோதரன் பூட்டபட்டிருந்த வீட்டினை திறந்து பார்க்கையில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது சம்பவத்தில் பலியான பெண்ணுக்கும் வேறு ஒரு நபருக்கும் நீண்ட காலமாக கள்ள காதல் தொடர்பு இருந்து வந்ததாகவும், இந்த விடயத்தினை அறிந்த பெண்ணின் கணவன் பலமுறை தமது மனைவிக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளதோடு 27ம் திகதி காலை பெண்ணின் கள்ளக்காதலன நாவலபிட்டி பகுதிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற வேளை அவர்களை பின் தொடர்ந்த கணவன் நாவலப்பிட்டி பகுதியில் வைத்து இருவரையும் தாக்கி முச்சக்கர வண்டியினையும் சேதபடுத்தி வீடு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்றைய தினம் வீடு வந்த மனைவி கணவனை கொலை செய்வதற்கு கத்தியை கையில் எடுத்த போது அதனை கண்ட கணவன் ஆத்திரமடைந்து மனைவியைின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மாளவிகா பிரியதர்ஷினி என கினிகத்தேனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மரண விசாரணைகள் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் தலைமையில் இடம் பெற்றவுடன் சட்டவைத்திய அதிகாரியிடம் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன்!
