வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் வீணாக விடமாட்டோம் என இந்திய விமானப்படை தளபதி கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார்.

ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளது.

எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளது. கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.

நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதாலும்  உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும்  எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.