திருவள்ளூர் அருகே உடலில் ரத்தக்கறை, கையில் கத்தியுடன் காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணைப் பார்த்து போலீசாரே திகைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் 19 வயதான கௌதமி. இவருக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஓட்டுநராக பணியாற்றி வந்த அஜித்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி, சுகன்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில்தான், கௌதமியிடம் அவர் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையறிந்த கௌதமியின் பெற்றோர், அஜித்தை கண்டித்துள்ளனர். ஆனால், அதனை பொருட்படுத்தாத அவர், தொடர்ந்து அந்த பெண்ணிடம் அவர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, கிராமத்தினர் கூடி, பஞ்சாயத்து பேசி, அஜித்தை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்தநிலையில்தான், சம்பவ தினத்தன்று, தனியாக சென்று கொண்டிருந்த கௌதமியை கத்தியைக் காட்டி மிரட்டி, அருகே உள்ள பனந்தோப்புக்கு இழுத்துச் சென்றுள்ளார் அஜித்குமார். பின்னர், அங்கு வைத்து, கத்திமுனையில் கௌதமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட முயன்றுள்ளார்.

தப்பிக்க போராடிய கௌதமி, திடீரென அஜித்குமார் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி, அவரை சரமாரியாக தாக்கி, கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். இதில், பலத்த வெட்டுக்காயமடைந்த அஜித்குமார், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்துதான், கௌதமி, கத்தியுடன் காவல்நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அஜித்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக, பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.