ஆன்லைனில் தேவையான உணவு வகைகளை விரும்புகின்ற ஓட்டல்களில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும் பழக்கம் நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. சுவிகி, சுமோட்டோ ஆகிய நிறுவனங்கள் உணவு சப்ளை செய்வதில் முன்னணியில் உள்ளன.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பீதியின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தார்கள்.

அவர்கள் வீடுகளில் இருந்தபடியே உணவுகளை ஆர்டர் செய்து வரவழைத்து இருக்கிறார்கள். இதில் சுவிகி நிறுவனத்துக்கு மட்டும் ஒரு நிமிடத்துக்கு 5,500 ஆர்டர்கள் என்ற விகிதத்தில் ஆர்டர்கள் பதிவாகி இருக்கின்றன.

அதேபோல் சுமோட்டோ நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு 4,254 ஆர்டர்கள் என்ற விகிதத்தில் ஆர்டர் பதிவாகி இருக்கிறது.

இந்த தகவலை சுவிகி நிறுவன உரிமையாளர் தியேந்தர் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆர்டர் மூலம் ஓட்டல்களில் ரூ.100 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளைவிட ரூ.25 கோடி அதிகமாகும்.

இந்த ஆர்டர்களில் 20 ஆயிரம் பிரியாணி மற்றும் 16 ஆயிரம் பீட்சா வகைகள் அடங்கும். இரவு உணவு ஆர்டரை பொறுத்தவரை 200 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் 200 சதவீதம் அதிகமாகவும், பெர்சாம்புர், ரூர்கேலா, கரீம்நகர் ஆகிய நகரங்களில் 150 முதல் 200 சதவீதம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

வந்து குவிந்த இந்த ஆர்டர்களுக்கு வீடு வீடாக கொண்டு உணவு சப்ளை செய்யும் பணியில் 1 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர். பொதுவாகவே ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகு ஆன்லைனில் உணவு வாங்கும் பழக்கம் அதிகரித்து இருப்பதாக ஊழியர்கள் கூறினார்கள்.