திருவனந்தபுரம் அருகே சிறையின்கீழ் பக்கமுள்ள முடப்புரம் பகுதியை சேர்ந்த தம்பதி சுகி(வயது51), தீப குமாரி(41). இவர்களுக்கு அகில்(17) என்ற மகனும், ஹரி பிரியா(13) என்ற மகளும் இருந்தனர்.


நேற்றுஇரவு 7மணி ஆன பிறகும் அவர்களது வீட்டில் மின்விளக்கு எரியவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டினர், சுகியின் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்கள் வளர்த்து வந்த நாய், வீட்டின் முன் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தது.

அதன் அருகில் ஒரு கடிதம் கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது, நாங்கள் வளர்த்த நாயை எங்களுடன் அழைத்துச்செல்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை தட்டி அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை. மேலும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், சுகியின் உறவினர்கள் மற்றும் சிறையின்கீழ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவஇடத்திற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு ஒரு அறையில் சுகி மற்றும் அவரது மனைவி தீபகுமாரியும், மற்றொரு அறையில் மகன் அகில், மகள் ஹரி பிரியா ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதையடுத்து 4பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன்-மனைவி இருவரும் தங்களின் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, தாங்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கின்றனர். மேலும் தாங்கள் வளர்த்துவந்த நாய்க்கும் வி‌ஷம் கொடுத்திருக்கின்றனர். எதற்காக இந்த முடிவை எடுத்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்களின் வீட்டில் சோதனை செய்தபோது, அவர்கள் எழுதிய மேலும் ஒரு கடிதமும் சிக்கியது. அதில் கடன்தொல்லை காரணமாக தற்கொலை செய்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே கடன் தொல்லையால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது.

மகன்-மகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.