மதுரவாயலை அடுத்த துண்டலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் அஸ்வினி (வயது 21). நர்சிங் படித்து முடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி, வெளியில் சென்று இருந்த தனது பெற்றோரின் செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பதறிப்போன அவரது பெற்றோர், அருகில் உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினர். அவர் மூர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தற்கொலை செய்த அஸ்வினி, வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர்.
ராணுவத்தில் வேலை செய்து வந்த பிரகாஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூருக்கு வந்தபோது, சாலை விபத்தில் பலியானார். தான் காதலித்து வந்த வாலிபர் மணம் முடிக்கும் முன்பே இறந்துவிட்டாரே என்ற விரக்தியில் அஸ்வினி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.