சென்னை பழைய வண்ணாரப்பேட்டயை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ அதே பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். கொரோனோ கால ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதனால் சிறுவர், சிறுமிகள் அதிகமாக இல்லத்திலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றியமைத்திருக்கிறார் சிறுமி லட்சுமி. ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு என பல்வேறு வகையான சிறுதானிய கொளுக்கட்டைகள், அசைவ உணவுகளான மீன் வருவல், இறால் வருவல், சிக்கன் 65, என அரங்கத்தையே நறுமணத்தால் ஈர்த்து விருந்து படைத்துள்ளார். கொரோனோ காலத்தில் அம்மாவிடமிருந்து சமையல் கலையை கற்று அதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியாக மகிழ்ச்சியடைகிறார் சிறுமி லட்சுமி.

உலக சாதனை படைத்த 9 வயது தமிழ் சிறுமி - Lankasri News

ஊரடங்கு காலத்தின் ஓய்வு நேரங்களில் தாயுடன் இணைந்து சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார் லட்சுமி. பிறகு அதன்மீது ஈடுபாடு கூட சமையல் நுணுக்கங்களை கற்று அதிகமான உணவு வகைகளை சமைக்க தொடங்கியுள்ளார். இந்த ஆர்வத்தை பார்த்த அவரது தாயார் கலைமகள், யுனிகோ சாதனை முயற்சியில் ஈடுபடுத்தி அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளார்.சாதிப்பதற்கு வயது தடையில்லை, ஆர்வமும் முயற்சியும் இருந்தால் எத்தகைய சாதனையையும் நிகழ்த்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் லட்சுமி.