கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேர் மீது வேன் மோதி கொன்ற வழக்கில் குற்றவாளியை விசாரித்த மன நல மருத்துவரையே விசாரணைக்கு இழுத்துள்ளது நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

அந்த கோர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, Minassian மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், Minassian மன நல பாதிப்பு கொண்டவர் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அது வழக்கில் முடிவெடுப்பதையே வேறு மாதிரி மாற்றிவிட்டது. அதாவது, Minassian தான் செய்த குற்றங்களை வேண்டுமென்றே செய்தாரா, அல்லது அவரது மன நல பிரச்சினைதான் அவரது செயல்களுக்கு காரணமா என்ற கேள்வி, வழக்கின் முக்கிய கேள்வியாகிவிட்டது.

அதனால், Minassianஐ பல்வேறு மன நல மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் Minassian மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தெரியாதவர், உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர் என்று தெரிவித்திருந்தனர்.

தன் குற்றங்களுக்கு Minassian பொறுப்பல்ல என பலர் கூறிய நிலையில், Dr. Scott Woodside என்பவர், Minassian, தான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்தேதான் செய்தார், அவரது குற்றங்களுக்கு அவர்தான் காரணம் என்று கூறியிருந்தார்.

இப்படி மன நல மருத்துவர்களே மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, நீதிமன்றம் Dr. Scott Woodsideஐயே குறுக்கு விசாரணை செய்வதென முடிவு செய்துள்ளது.