அசாம் மாநிலத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு, பெற்ற பிள்ளைகளையே பலி கொடுக்க துணிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்ட 2 சகோதரர்கள் இந்த துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர். கவுகாத்தி மாவட்டத்தில் திமோவ்முக் எனும் பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் ஜமியூர் உசைன், சரிபுல் உசைன். இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர்.

உசைன் சகோதரர்களின் வீட்டில் இருக்கும் மாமரத்திற்கு அடியில் புதையல் இருப்பதாக பெஜ் எனும் மந்திரவாதி கூறியுள்ளார். அந்தப் புதையலை எடுக்க வேண்டும் என்றால் பெற்ற பிள்ளைகளை பலி கொடுத்தாக வேண்டும் என்றும் சகோதரர்களுக்கு அவர் ஆலோசனை கொடுத்து உள்ளார். இந்நிலையில் இருவரும் தங்களது குழந்தைகள் மற்றும் மனைவியை பலிக் கொடுப்பதற்காக வீட்டில் பல நாட்களாக அடைத்து வைத்துள்ளனர்.

இவர்களின் மர்ம நடவடிக்கையை பார்த்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதனால் உசைன் சகோதரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பணத்தின் மீது ஆசைப்பட்ட சகோதரர்கள் பெற்ற பிள்ளைகளையே பலி கொடுக்க துணிந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.