டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் நிலவும் படுக்கைத் தட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கிட்டதட்ட 5 ஆயிரம் படுக்கைகள், அரசு  வைத்தியசாலைக்கு தேவைப்படும் நிலையில், அதில் ஆயிரம் படுக்கைகளையாவது மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமென குறித்த சந்திப்பில் முதலமைச்சர் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் உதவியை கெஜ்ரிவால் நாட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காற்று மாசு காரணமாகவே டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளதாகவும் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.