தமிழகத்தில் பாடசாலைகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டமை அரசின் ஊசலாட்ட மனநிலையை காட்டுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்யோசனைகள் இன்றி அறிவித்துவிட்டு பின்வாங்குவது அரசின் வழக்கமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மக்களை மேலும் குழப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
அதன் பின்னர் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.