பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் சுஷாந்த்சிங் தந்தை பீகார் மாநில போலீசாரிடம் நடிகையும் சுஷாந்த்சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பீகார் மாநில போலீசாரின் பரிந்துரையின்படி தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்று நடத்துகிறது. சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தவுடன் முதல் கட்டமாக ரியா தான் முதல் குற்றவாளி என்று வழக்குப்பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதாவது இன்று நடிகை ரியா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை ரியா தனது வழக்கறிஞருடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சற்றுமுன் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ரியா மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு, காவல்துறை என அடுத்தடுத்து நடவடிக்கை பாய்வதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.