அமெரிக்காவின் புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் குழாயில் தவித்த பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

லிண்ட்சே கென்னடி (43) எனும் பெண் மார்ச் 3ஆம் திகதி கால்வாய் ஒன்றில் நீந்தச் சென்றுள்ளார். கால்வாய்க்குள் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பைக் கண்டு அதைப் பார்க்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்து திரும்ப வர அவருக்கு வழி தெரியவில்லை.

அந்த சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடை ஒன்றிற்குள் சென்ற லிண்ட்சே அங்கு சுமார் 20 நாட்கள் செலவிட்டுள்ளார்.

கடைசியாக, மழைநீர் வடிகுழாய் ஒன்றிலிருந்து வெளிச்சம் வருவதைக் கண்ட லிண்ட்சே, அங்கிருந்து சத்தம்போட்டால் யாருக்காவது கேட்கலாம் என்று எண்ணி, அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் சென்று அமர்ந்திருக்கிறார்.

அவர் நம்பியது போலவே, அந்தப் பக்கமாக யாரோ வருவதைக் கண்ட லிண்ட்சே சத்தமிட, அதைக் கேட்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவலளிக்க, தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டுள்ளனர்.

பொதுவாக மழைநீர் வடிகுழாய்க்குள்ளிருந்து பூனை, நாய் போன்ற விலங்குகளை தான் மீட்பதுண்டு என்று கூறும் தீயணைப்பு வீரர்கள், லிண்ட்சே அந்த அபாயகராமான சூழலில் எப்படி 20 நாட்கள் செலவிட்டார் என ஆச்சரியப்படுகிறார்கள்.