மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. செல்போன்கள், கோவில்களில் கொள்ளை என பல வழக்குகள் பதிவாகின.

இந்த சம்பவத்தில் ஒருவரே ஈடுபடுவதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் திருமங்கலம் துணை சூப்பிரண்டு வினோதினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் ஜவுளி கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர்.

இதேபோல் மேலும் சில திருட்டு சம்பவங்கள் தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவும் போலீசாருக்கு கிடைத்தது. அதன் மூலம் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது உறுதியானது.

கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்த முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்ற கள்ள ராமன் (வயது 65) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கைதான கள்ள ராமனுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமான நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு மனைவி சுப்புலட்சுமி இறந்து விட்டார். அதன் பிறகு கடந்த 18 ஆண்டுகளாக கள்ள ராமன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. விருதுநகர் தெற்கு காவல் நிலைய பகுதி வழக்கில் கைதான கள்ள ராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி விடுதலையான பிறகும் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

கப்பலூர் ஒர்க்‌ஷாப்பில் லாரி டயர் நிறுவனத்தில் பொருட்களை கொள்ளையடித்தது, திருமங்கலம் ஓட்டல்-அங்கன்வாடி மையம், செல்போன் கடை, விருதுநகர் ஜவுளிக்கடை என பல இடங்களிலும் கள்ள ராமன் கைவரிசை காட்டி இருப்பதாக விசாரணையில் தெரிவித்துளார்.

இதேபோல் வாடிப்பட்டி அங்கன்வாடி மையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்தும், கோவில்களுக்குள் புகுந்தும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

கள்ள ராமன் கொள்ளையடித்த பணத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் உல்லாசம் அனுபவித்ததாக போலீசாரிடம் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.

கைதான கள்ள ராமனிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மற்றும் 94 வெண்கல மணிகள், குத்துவிளக்குகள், பித்தளை அண்டாக்கள், சிலிண்டர்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.