தமிழகத்தில் 23 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தலைமறைவாகியுள்ளார். கோவையின் ஒண்டிகாரன் தோட்டம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் தனது மனைவியான சத்யா (23) என்கிற ரூனுவுடன் வசித்து வந்தார். இந்த பகுதியில் தங்கி இவர்கள் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவர் வசித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், சுதர்சனின் மனைவி சத்யாவுக்கும் ரஞ்சித்துக்கும் பல மாதங்களாக தவறான தொடர்ப்பு இருந்து வந்துள்ளது.

இதை சுதர்சன் கண்டித்துள்ளார், இந்த நிலையில் ரஞ்சித் சுதர்சனிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் இருவரும் நண்பர்களானார்கள்.

சுதர்சன் சமாதானமடைந்ததை தொடர்ந்து ரஞ்சித், சுதர்சன், சத்யா மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர், கோழிக்கறி வாங்க சுதர்சன் கடைக்கு சென்றுள்ளார். சுதர்சன் வீட்டுக்கு திரும்பிய போது ரஞ்சித்தும் சத்தியாவும் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுதர்சன் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித்துக்கும் பலத்த காயம் ஏற்பட மயங்கி கீழே விழுந்தார்.

பின்னர் சுதர்சன் அங்கிருந்து தப்பியோடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் அங்கு வந்து சத்யா சடலத்தை கைப்பற்றிவிட்டு ரஞ்சித்தை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதோடு மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சுதர்சனையும் தேடி வருகிறார்கள்.