ஆயிரங்காலத்து பயிர் என்று திருமணத்தை சொல்வார்கள். ஆனால் அது இன்று வேடிக்கை சம்பவமாகிவிட்டது.
இன்றைய இளைய தலைமுறையினர் காதலை சமூக வலைதளங்களில்தான் கண்டறிகின்றனர். அதில் அவர்கள் காணும் காட்சிகளை நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர்.
இதனை உறுதிப்படுத்துவது போல் ஆந்திராவில் பள்ளி வகுப்பறையை மணமேடையாக்கி பிளஸ்-2 மாணவிக்கு பிளஸ்-2 மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவன் ஒருவனும் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர்.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் இருவரும் சந்திக்காமல் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டதையடுத்து இந்த காதல் ஜோடி இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.
நீண்ட நாள் பிரிவு காதலை மேலும் வளர்த்தது. காதலின் அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வீட்டிற்கு தெரிந்தால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் பள்ளி வகுப்பறையையே அந்த மாணவன்-மாணவி தங்களது மணமேடையாக கருதி மாணவி கழுத்தில் மாணவன் தாலி கட்டியுள்ளார்.
இதை அங்கு இருந்த சக மாணவன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது.
வீடியோ காட்சியில் மாணவிக்கு மாணவன் வகுப்பறையில் வைத்து தாலி கட்டுகிறான். பின்னர் அந்த மாணவி, தன்னுடைய நெற்றியில் குங்குமம் வைக்குமாறு அந்த மாணவனிடம் கூறுகிறார்.
இதையடுத்து அந்த மாணவன், மாணவிக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடுகிறான். இதை இன்னொரு மாணவன் தனது செல்போனில் பதிவு செய்து உள்ளான்.
சீக்கிரம் தாலியைக் கட்டு, ஆட்கள் வந்து விடப்போகிறார்கள் என்று அந்த வீடியோவை எடுத்த சக மாணவன் கூறுவதும் அதில் பதிவாகி உள்ளது. இந்த திருமணம் நடைபெறும் போது வகுப்பறையில் யாருமே இல்லை.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அறிந்த அந்த பள்ளி முதல்வர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவன், மாணவியையும் மற்றும் அவர்களுக்கு உதவிய மாணவனையும் டிஸ்மிஸ் செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாரும் சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாட்டில் தான் நடைபெறும். தற்போது செல்போன்களில் மூலம் உலக அளவிலான நிகழ்வுகளை பார்க்கும் இளைய தலைமுறையினர் அதன்படி நடக்க முயல்கின்றனர்.
கலாசாரத்திற்கு புகழ்பெற்ற இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது குடும்ப உறவுகளை கேள்விக்குறியாக்கும்.
எல்லாத்துறைகளிலும் கட்டுப்பாடு என்பது அவசியம். மாணவர்கள் மனதில் நீதி போதனைகளை பதிய வைத்த காலங்கள் கடந்து சென்றுவிட்டது.
செல்போன்களின் பிடியில் சிக்கி மாணவர்கள் சின்னாபின்னமாகி வருகின்றனர்.
பெற்றோர்கள் பொருள் தேடும் போராட்டத்தில் மூழ்கி போகும் நேரத்தில் மாணவர்களை கவனிக்க தவறிவிடுகின்றனர்.
பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கள் மனம் போல் செயல்பட்டு வருகின்றனர்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் தவறுகளை துணிந்து செய்கின்றனர்.
இதற்கு முடிவு கட்ட அவர்கள் கவனிக்கப்பட வேண்டும். நல்ல விஷயங்களை பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களை ஒழுக்கத்துடன் வளர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.