விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படமும், அஜய் ஞானமுத்து இயக்கிவரும் ’கோப்ரா’ திரைப்படமும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பும் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் தாமதம் ஆகி இருந்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ’துருவ நட்சத்திரம்’படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விக்ரம் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்திற்காக டப்பிங் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார் திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.