காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் புதிய மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ந்தேதி தமிழகம் வருகிறார்.

காங்கிரஸ் 

தமிழ்நாட்டில் ஆட்சி, அதிகாரத்தை இதுவரை அனுபவிக்காமல் இருந்தது காங்கிரஸ். 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் 2 அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளனர். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தேசிய தலைமை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

மாணிக்கம் தாகூர்

த.வெ.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களை இந்த கூட்டணியிலேயே எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் புதிய மாநில தலைவராக மாணிக்கம் தாகூர்  நியமிக்கப்பட்டார், அவர் தலைமையில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் என தொடர்ந்து கட்சி பணிகள் வேகம் எடுத்துள்ளது. 

இந்த நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி வழங்கும் கூட்டம் சென்னை ஈ.சி.ஆரில் வரும் 21-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி

இந்த பயிற்சி கூட்டத்தில் ஏதாவது ஒரு நாள் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி  கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

முதலமைச்சர்  விஜய்

மேலும் த.வெ.க. தலைவர் முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல் இணைந்து ஒரே மேடையில் கலந்து கொள்ளும் விதமாக நிகழ்ச்சி நடத்துவதற்கும் தமிழக முதலமைச்சர்  விஜய்யிடம் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 தலைவர்களின் நேரமும் கிடைப்பதை பொறுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.